திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை
ஹிந்து தருமத்தைக் குறித்தும்
மற்ற உலக சமயங்களைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருந்தேன்.
என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற
அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். சோதனைகளிலிருந்து
ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது எது என்பதை மனிதன் அறிவதில்லை.
அதுவும் அச்சமயத்தில் அதைப்பற்றிய அறிவே இருப்பதில்லை, கடவுள்
நம்பிக்கை இல்லாதவனாயின் தான் தற்செயலாகத் தப்பிவிட்டதாகக் சொல்லிக்
கொள்ளுவான். கடவுள் நம்பிக்கை உள்ளனானால், கடவுளே தன்னைக் காத்தார்
என்பான். தனக்கு இருந்த சமயஞானமோ, ஆன்மீகக் கட்டுப்பாடோதான்,
ஆண்டவன் தன்னிடம் கருணை காட்டியதற்குக் காரணம் என்ற முடிவுக்கு
வருவான். அல்லது வரக்கூடும். ஆனால் அவன் ரட்சிக்கப்படும் சமயத்தில்
தன்னைக் காத்தது தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாடுதானா, வேறு ஒன்றா
என்பதை அவன் அறியான் தனக்கு ஆன்மீக பலம் அதிகம் இருக்கிறது என்று
அகம் பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர்
யார் ? சமய ஞானம் சோதனை ஏற்படும் சமயங்கிளில் வெறும் உமியாகவே
தோன்றுகிறது.
சமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை
என்பதை இங்கிலாந்தில் தான் நான் முதன் முதலில் கண்டுகொண்டேன்.
இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பாற்றப்பட்டேன்
என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில், அப்பொழுது
நான் மிகச் சிறியவன். ஆனால், இப்பொழுதோ எனக்குச் சிறிது அனுபவமும்
ஏற்பட்டிருந்தது.
எனக்கு நினைவிருக்கும் அளவில்,
நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கடைசி ஆண்டில் அதாவது 1890-இல்
சைவ உணவாளர்கள் மகாநாடு ஒன்று போர்ட்ஸ்மவுத்தில் நடந்தது. அதற்கு
ஓர் இந்திய நண்பரும். நானும் அழைக்கப்பட்டிருந்தோம். போர்ட்ஸ்மவுத்
துறைமுகம், மாலுமித் தொழிலில் ஈடுபட்டவர்களையே பெரும்பாலும்
கொண்ட பட்டணம் அங்கே தீய நடத்தையுள்ள பெண்களைக் கொண்ட வீடுகள்
பல உண்டு. இப்பெண்கள் விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள்
அல்ல. என்றாலும் தங்கள் கற்பு நெறியைக் குறித்து அவர்கள் அவ்வளவாகக்
கவலைப்படாதவர்கள். இப்படிபட்ட வீடுகளில் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம்.
இதைப்பற்றி வரவேற்புக் கமிட்டிக்கு எதுவுமே தெரியாது என்பதை
குறித்து நான் சொல்லத் தேவையில்லை. போர்ட்ஸ்மவுத் போன்ற ஒரு
பட்டணத்தில் தங்குவதற்கு நல்ல இடம் எது கெட்ட இடம் எது என்பதைக்
கண்டுபிடிப்பது எங்களைப்போல் எப்பொழுதோ ஒரு சமயம் அங்கே போகிறவர்களுக்குக்
கஷ்டமாகவே இருந்திருக்கும்.
மகாநாட்டிலிருந்து மாலையில் திரும்பினோம்.
இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ரப்பர் பிரிட்ஜ; என்ற ஒருவிதச்
சீட்டாட்டம் ஆட உட்கார்ந்தோம். அவ்வீட்டுக்கார அம்மாளும் எங்களுடன்
சீட்டாடினார். இப்படி வீட்டுக்கார அம்மாளும் சேர்ந்து சீட்டாடுவது.
இங்கிலாந்தில் கௌரவான குடும்பங்களிலும் வழக்கம். ஆட்டத்தில்
ஈடுபட்டிருப்பவர் ஒவ்வொருவரும் குற்றமற்ற வகையில் கேலியாகப்
பேசுவது சாதாரணமானது. ஆனால், இங்கோ என் சகாக்களும் அவ்வீட்டு
அம்மாளும் ஆபாசமான பேச்சுக்களைப் பேச ஆரம்பித்தார்கள. என் நண்பர்,
அக்கலையில் கைதேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது. அது என்னையும்
பிடித்துக் கொண்டு விட்டது, நானும் அவ்விதப் பேச்சுக்களில் கலந்து
கொண்டேன். சீட்டையும் சீட்டாட்டத்தையும் விட்டுவிட்டு. எல்லை
மீறி நான் போய்விட இருந்த சமயத்தில் அந்த நல்ல சகாவின்மூலம்
கடவுள் எனக்குத் தெய்வீகமான எச்சரிக்கையைச் செய்தார், தம்பி
* உன்னுள் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது ? எழுந்து
போய்விடு, சீக்கிரம் என்று அவர் சொன்னதே அந்த எச்சரிக்கை.
நான் வெட்கம் அடைந்தேன். எச்சரிக்கைப்படி
நடந்தேன். நண்பருக்கும் என்னுள்ளே நன்றியறிதலைத் தெரிவித்துக்
கொண்டேன் என் அன்னையின் முன்னிலையில் நான் மேற்கொண்டிருந்த விரதத்தை
நினைவுபடுத்திக் கொண்டு, அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டேன்.
தடுமாறிக்கொண்டே, நடுங்கிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன்.
துரத்திய வேடனிடம் இருந்து தப்பிய மிருகம் போல் என் இருதயம்
துடிதுடித்தது.
என் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்,
என் மனத்தில் காம இச்சையைத் தூண்டிவிட்டது இதுவே முதல் தடவை
என்று நினைக்கிறேன். அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை.
என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எனக்கு உண்டாயின. அந்த வீட்டிலிருந்தே
போய்விடுவதா ? அந்த இடத்தை விட்டே ஒடிவிடுவதா ? நான் செய்தது
என்ன கொஞ்சம் புத்தி கெட்டுப் போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும்
? இனி மிகந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுவதென்ற முடிவைச்செய்து
கொண்டேன். அவ்வீட்டைவிட்டுப் போய்விடும் மாத்திரம் அல்ல, எப்படியாவது
அவ்வூரை விட்டே போய்விடுவது என்றும் தீர்மானித்தேன். மகாநாடு
இரண்டு நாட்களே நடந்தது. அடுத்த நாள் மாலையே போர்ட்ஸ்மாவுத்திலிருந்து
நான் புறப்பட்டுவிட்டதாக ஞாபகம். என் நண்பர் மாத்திரம் சில நாட்கள்
அங்கே தங்கினார்.
சமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ,
அவர் நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ எனக்கு
அப்பொழுது தெரியாது. அச்சமயமே கடவுள் என்னைக் காப்பாற்றினார்
என்பதை மாத்திரம் தெளிவற்ற முறையில் நான் அறிந்தேன். சோதனை நேர்ந்த
சமயங்களிளெல்லாம் அவரே என்னைக் காத்தார். கடவுள் காப்பாற்றினார்
என்ற சொற்றொடருக்கு நான் இன்று ஆழ்ந்த பொருள் கொள்ளுகிறேன் என்பதை
அறிவேன். என்றாலும், அதன் முழுப்பொருளையும் நான் இன்னும் அறிந்து
கொள்ளவில்லை. என்றே உணர்கிறேன் அதன் முழுப் பொருளையும் அறிந்த
கொள்ளுவதற்கு மேலான அனுபவம் ஒன்றே உதவ முடியும். என்றாலும்,
ஆன்மீகத் துறையிலும், வக்கீலாக இருந்தபோதும், ஸ்தாபனங்களை நடத்தியபோதும்,
ராஜீய விஷயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம்
கடவுளே என்னைக் காப்பாற்றினார். என்று சொல்ல முடியும். நம்பிக்கைக்கே
ஒரு சிறிதும் இடம் இல்லாதபோதும், உதவுவோர் உதவத் தவறித் தேற்றவாரும்
ஓடிவிட்ட சமயத்திலும், எப்படியோ அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன்.
ஆனால் எங்கிருந்து அது வருகிறது என்பதை நான் அறியேன். இறைவனை
வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள்
அல்ல. உண்பதும் பருகுவதும், அமர்வதும் , நடப்பதும் எவ்விதம்
உண்மையான செல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை.
அவை மட்டுமே உண்மையானவை, மற்றவை யாவும் பொய்யானவை என்று சொல்வதும்
மிகையாகாது.
அத்தகைய வழிபாடு அல்லது பிரார்த்தனை,
வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும்
வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிரார்த்தனை.
ஆகையால், அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு,
உள்ளத் தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின், தானே இனிய கீதம்
எழுந்து, இறைவன் அருளைக் கூட்டுவிக்கும். பிரார்த்தனைக்குப்
பேச்சுத் தேவையில்லை, உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம்
போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே
என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அத்துடன்
முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்.