ஆங்கிலக் கனவானாக நடிப்பு
சைவ உணவில் நான் கொண்ட நம்பிக்கை
நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. உணவு சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களைப்
படிக்கவேண்டும் என்ற பசியை சால்ட்டின் புத்தகம் எனக்கு உண்டாக்கிற்று.
சைவ உணவைப் பற்றிக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தேன்
ஹோவார்டு வில்லியம்ஸ் எழுதியிருந்த உணவு முறையின் தருமம் (The
Ethics of Diet) என்ற நூல், ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரையில்
மனிதரின் உணவு வகையைப் பற்றி எழுதப் பெற்ற எல்லாப் புத்தகங்களின்
வரலாற்றுச் சரித்திரத்தையும் கூறுகிறது. பித்தகோரஸ், ஏசுநாதரிலிருந்து
தற்காலத்தில் வாழ்கிறவர்கள் வரை, எல்லாத் தத்துவஞானிகளும், தீர்க்கதரிசிகளும்
சைவ உணவு உட்கொள்ளுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்பதைக்
காட்டவும் இந்த நூல் முயன்றிருக்கிறது.
டாக்டர் அன்னா கிங்க்ஸ் போர்டு
எழுதிய உணவுமுறையில் சரியான வழி (The Perfect way in Diet) என்ற
நூலும் கவர்ச்சிகரமானது. தேகாரோக்கியத்தையும், சுகாதாரத்தையும்
குறித்து டாக்டர் அலின்சன் எழுதியிருந்தவையும் அதே போல உதவியாக
இருந்தன. நோயாளியின் ஆகாரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே நோயைக்
குணமாக்கும் முறையை அந்த நூலில் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
அவர் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர். ஆகையால், தம்மிடம்
வரும் நோயாளிகளுக்கும் கண்டிப்பான சைவ உணவு யோசனையைச் சொல்லி
வந்தார். இந்த நூல்களையெல்லாம் படித்ததன் பலனாக, உணவாராய்ச்சி
செய்வதும் என் வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்றுவிட்டது.
ஆரம்பத்தில் தேகசுகத்தை முக்கியமாகக் கருதியே பெரும்பாலும் இந்தச்
சோதனைகளைச் செய்து வந்தேன். ஆனால், பிறகோ சமயப்பற்று, இச்சோதனைகளுக்குப்
பிரதானமான நோக்கமாயிற்று.
இதன் நடுவில் என் நண்பர் என்னைப்
பற்றிக் கவலைப்படுவதை விடவில்லை. மாமிசம் சாப்பிடுவதில் எனக்கு
இருக்கும் ஆட்சேபங்களில் நான் பிடிவாதமாகவே இருந்து வந்தால்,
என் உடல் இளைத்து போவதோடு நான் மண்டுவாகவும் இருந்துவிடுவேன்
என்று கருதினார். ஏனெனில், மாமிசம் சாப்பிடாதிருந்தால் ஆங்கிலேய
சமூகத்தில் நான் சகஜமாகப் பழக முடியாது என்றும் அவர் நினைத்தார்.
என் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலேயே இப்படியெல்லாம் எண்ணினார்.
சைவ உணவின் பெருமையைப் பற்றி கூறும் நூல்களில் கவனம் செலுத்த
நான் தலைப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும், அப் புத்தகங்கள்
என் புத்தியைக் குழப்பி, விடுமே என்று பயந்தார். என் படிப்பை
மறந்து விட்டு, அந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் இறங்கிப் பித்தனாகிவிடுவேன்
என்றும் அஞ்சினார்.
ஆகையால், என்னைச் சீர்திருத்துவதற்காகச்
கடைசி முயற்சி ஒன்றையும் செய்தார். ஒருநாள், நாடகம் பார்க்கப்
போகலாம் என்று என்னை அழைத்தார். நாடகம் பார்க்கும் முன்பு இருவரும்
ஹால்பர்ன் போஜன விடுதியில் சாப்பிடுவது என்றும் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த போஜன விடுதியின் கட்டடம் அரண்மனை போன்றே எனக்குத் தோன்றியது.
மேலும், விக்டோரியா, ஹோட்டலில் இருந்து வந்து விட்டப் பிறகு,
நான் சாப்பிடப் போன முதல் பெரிய விடுதியும் இதுதான். அந்த ஹோட்டலில்
இருந்த போது நான் திக்குத் திசை தெரியாதவனாகவே இருந்ததால் அங்கே
ஏற்பட்ட அனுபவம் எதுவும் எனக்கு இங்கே உதவியாக இருந்துவிடவில்லை.
சங்கோஜத்தினால் நான் கேள்வி எதுவும் கேட்கமாட்டேன் என்று எண்ணியே
என் நண்பர் என்னை இந்த விடுதிக்கு அழைத்துவரத் திட்டமிட்டு இருந்தார்
என்று தெரிந்தது. அநேகர் அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு மத்தியில் நானும் என் நண்பரும் ஒரு மேiஜயின் முன்
சாப்பிட உட்கார்ந்தோம். முதலில் சூப் வந்தது. அது என்ன சூப்
என்பது தெரியாமல் திகைத்தேன். ஆனால் அதைப் பற்றி நண்பரிடம் கேட்கும்
தைரியம் எனக்கு வரவில்லை.
ஆகவே, பரிசாரகரைக் கூப்பிட்டேன்,
நண்பர் நிலைமையைக் கவனித்துக் கொண்டார். என்ன விஷயம் என்று என்னைக்
கடுமையாகக் கேட்டார். சூப் சைவ சூப்தானா என்று விசாரிக்க விரும்பினேன்.
என்று அதிகத் தயக்கத்துடனேயே சொன்னேன். நாகரீகமான சமூகத்தில்
பழகுவதற்கு நீர்க் கொஞ்சமும் தகுதியில்லாதவர் என்று அவர் ஆத்திரத்தோடு
கூறினார். இங்கே சரியானபடி நடந்துகொள்ள உம்மால் முடியாது என்றால்
வெளியே போய் விடும். வேறு ஏதாவது ஒரு சாப்பாட்டு விடுதியில்
சாப்பிட்டுவிட்டு வந்து எனக்காக வெளியில் காத்திரும் என்றார்
இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். வெளியிலும் போய்விட்டேன்.
பக்கத்திலேயே சைவ உணவு விடுதி ஒன்று இருந்தது. ஆனால் அது அப்பொழுது
மூடப்பட்டுவிட்டது. ஆகையால், அன்றிரவு சாப்பாடே இல்லாமல் பட்டினி
கிடந்தேன். அந்த நண்பருடன் நாடகத்திற்கு சென்றேன். ஆனால், செய்துவிட்ட
அசந்தர்ப்பமான காரியத்தைக் குறித்து அவர் ஒரு வார்த்தைக் கூடப்
பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையிலோ, நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
எங்களிடையே நட்புமுறையில் ஏற்பட்ட
கடைசிப் பூசல் இதுவே. எங்களுக்குள் இருந்த உறவை இது கொஞ்சமும்
பாதித்து விடவில்லை. என் நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கெல்லாம்
காரணம், அவர் என் மீது கொண்டிருந்த அன்பே என்பதை நான் அறியமுடிந்தது.
அந்த அன்பைப் போற்றவும் போற்றினேன். எண்ணத்திலும், செயலிலும்
எங்களுக்குள் வேற்றுமை இருந்தது. உண்மை என்றாலும் அவர் மீது
நான் அதிக மதிப்புக் கொண்டேன்.
அதனால், எனக்காக அவர் கொண்டிருந்த
கவலையைப் போக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இனி நாகரீகக்
குறைவாக நடந்து கொள்ளமாட்டேன். சைவ உணவு விரதம் கொண்ருப்பதால்
என்னிடம் இருந்த குறைக்கு ஈடு செய்ய நாகரீக சமூகத்திற்குத் தகுதியான
மற்றக் காரியங்களையெல்லாம் அனுசரித்து நாகரீகமாக நடந்து கொள்பவன்
ஆகிவிட்டேன் என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதே என்
முடிவு இதற்காக ஆங்கிலக் கனவானாகவே ஆகிவிடுவதற்கு வேண்டிய அசாத்தியமான
காரியங்களையெல்லாம் செய்ய முற்பட்டேன்.
பம்பாயில் தைத்த உடைகளையே தறித்துக்
கொண்டிருந்தேன். அந்த உடை ஆங்கிலச் சமூகத்திற்குப் பொருத்தமானதன்று
என்று எண்ணினேன். ராணுவக்கடற்படை ஸ்டோரில் புதிய உடை வாங்கினேன்.
பத்தொன்பது ஷில்லிங் விலையில் ஒரு சிம்னி - பாட் தொப்பி வாங்கினேன்.
அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகமான விலை. லண்டனில் நாகரீக
வாழ்க்கைக்கு மத்திய இடமான பாண்ட் தெருவில், மாலையில் போட்டுக்கொள்ளும்
உடுப்பு ஒன்று வாங்கி பத்துப் பவுனை பாழாக்கினேன். உத்தமரும்
உயர் குணம் படைத்தவருமான என் சகோதரருக்கு எழுதி கடிகார இரட்டைவட
தங்கச் சங்கிலி ஒன்றை அனுப்பி வைக்கும் படியும் செய்தேன். கடையில்
கட்டி விற்கும் கழுத்து டை அணிவது நாகரீகத்திற்குச் சரியில்லவாகையால்,
டை-யை நானே கட்டிக் கொள்ளும் வித்தையயும் கற்றுக்கொண்டேன். இந்தியாவில்
குடும்ப நாவிதர் எனக்கு க்ஷவரம் செய்து விடும்போது மாத்திரமே
முகக் கண்ணாடியை பார்க்கும் ஆடம்பரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இங்கோ, ஒரு பெரிய கண்ணாடி முன்னால்
நின்று, என்னைப் பார்த்துக் கொள்வதிலும் டை-யைச் சரிபடுத்திக்
கொள்வதிலும் நாகரீகத்திற்கு ஏற்றாற்போல் தலைவாரிக்கொள்வதிலும்
தினம் 10 நிமிட நேரத்தை வீணாக்குவேன். என் தலை மயிர் மிருதுவானதன்று.
ஆகவே, அதைச் சீவிச் ஒவ்வொரு முறையும் தலையில் தொப்பியை வைக்கும்
போதும் எடுக்கும் போதும் தலை மயிரை சரிபார்க்க கை தானாகவே தலைக்குப்
போய்விடும். நாகரீக சமூகத்தினரின் நடுவே உட்கார்ந்திருக்கும்
போது, ஒவ்வொரு சமயமும் கை இதற்காகவே தலையில் வேலை செய்து கொண்டிருக்கும்.
மற்றொரு நாகரீகப் பழக்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.
நாகரீகத்தோற்றம் அளிப்பதற்கு இவ்வளவும்
போதாதென்று, ஆங்கிலக் கனவானாவதற்க்கு வேண்டியவை என கருதப்பட்ட
மற்ற அம்சங்களிலும் கவனத்தை செலுத்தினேன். நடனம் ஆடக் கற்றக்
கொள்ளுவதும், பிரெஞ்சு மொழி கற்பதும், பிரசங்கவன்மையும் ஓர்
ஆங்கிலக் கனவானுக்கு அவசியம் என்றார்கள். பிரெஞ்சு, பக்கத்து
நாடான பிரான்ஸின் மொழி என்பது மாத்திரம் அல்ல, ஐரோப்பா கண்டத்தில்
ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருடன் பேசுவதற்குப் பொது மொழியாகவும்
அது இருந்தது. எனக்கு அக் கண்டம் முழுவதையும் சுற்றிப் பார்க்க
வேண்டும் என்ற ஆசை ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நடனம்
கற்றுக் கொள்ளுவதெனத் தீர்மானித்து, சில மாதங்களுக்கு மூன்று
பவுன் கட்டணமும் செலுத்தினேன். மூன்று வாரங்களில் இதில் ஆறு
பாடங்களைக் கற்றிருப்பேன். ஆனால், தாளகதிக்கு ஏற்ப நடனமாடுவது
என்பது என்னால் ஆகவில்லை. பியானோ வாத்திய இசையைப் பின்பற்ற முடியாது
போகவே தாளத்தை அனுசரிக்கவும் இயலவில்லை.
அப்படியாயின் பிறகு என்ன செய்வது
? ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார்
என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும்
வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும்,
அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும்; ஒரு
கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும்
வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக
நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.
ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக்
கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக
மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக
ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன் இதற்குப் பாடப் புத்தகமாக
பெல் எழுதிய ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட் என்ற புத்தகத்தை அவர்
சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம்
ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், ஸ்ரீ பெல் என் காதில் எச்சரிக்கை
மணியை அடித்தார் நானும் விழித்துக் கொண்டு விட்டேன்.
வாழ் நாளெல்லாம் நான் இங்கிலாந்திலேயே
இருக்கப் போவதில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அப்படியிருக்க,
பேச்சுவன்மையைக் கற்றுக் கொள்ளுவதால் என்ன பயன் ? அதோடு நாட்டியமாடுவது
என்னை எப்படி ஒரு கனவான் ஆக்கி விடும் ? பிடில் வாசிக்க நான்
இந்தியாவிலும் கற்றுக் கொள்ளலாம். நானோ மாணவன், ஆகவே என் படிப்பையே
நான் கவனித்துக் கொண்டு போக வேண்டும். பாரிஸ்டராவதற்கு வேண்டியத்
தகுதியையே நான் அடைய வேண்டும். என்னுடைய ஒழுக்கம் என்னைக் கனவானாக்கினால்
அதுவே போதும் இல்லையானால் அந்த ஆசையை நான் விட்டுவிட வேண்டியதே.
இவையும், இவை போன்ற எண்ணங்களும்
என்னைப் பற்றிக் கொண்டன. பிரசங்கப் பயிற்சிக்காக நான் அமர்த்திக்
கொண்டிருந்த ஆசிரியருக்கு இந்த என் எண்ணங்களையெல்லாம் ஒரு கடிதத்தில்
எழுதினேன். மேற்கொண்டு பாடல் கற்றுக் கொள்ள வராததற்கு மன்னிக்குமாறும்
கேட்டுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதெல்லாம் இரண்டு மூன்று
பாடங்களே. இதே போல் நடன ஆசிரியருக்கும் எழுதி விட்டேன். பிடில்
வாத்தியாரிடம் நேரில் போய், வந்த விலைக்குப் பிடிலை விற்றுவிடுமாறு
கேட்டுக் கொண்டேன். அப்பெண்மணி என்னிடம் நட்புடன் பேசினாள்.
ஆகவே, நான் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த
விதத்தை அவரிடம் கூறினேன். முற்றும் உருமாறுதல் அடைந்துவிட வேண்டும்
என்பதில் நான் கொண்டிருந்த முடிவை ஏற்று அவர் உற்சாகப்படுத்தினார்.
ஆங்கிலக் கனவான் ஆகி விட வேண்டும்
என்பதில் எனக்கு இருந்த மோகம் சுமார் மூன்று மாதங்கள் இருந்திருக்கும்.
அதற்குப் பின் மாணவனாகி விட்டேன். உடை, சம்பிரதாயப்பூர்வமாக
இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மாத்திரம் பல ஆண்டுகள்
என்னிடம் இருந்து வந்தது.