முடிவாக லண்டனில்
கப்பல் பிரயாணத்தில் எனக்கு மயக்கம்
எதுவும் வரவே இல்லை. ஆனால், நாளாக ஆக எனக்கு அலுப்புத்தான் அதிகமாக
இருந்தது. பிரயாணிகளின் சாப்பாட்டு வசதிக்காரியஸ்தரிடம் பேசக்கூட
எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசி எனக்குப் பழக்கமே
இல்லை. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்பில் ஸ்ரீ மஜ்முதாரைத்
தவிர மற்றெல்லோரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் என்னால் பேச முடியவில்லை.
அவர்கள் என்னிடம் வந்து ஏதேனும் பேசினால், அவர்கள் சொல்லுவது
என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருந்தது. புரிந்து
கொண்டாலும் என்னால் பதில் சொல் முடியவில்லை. பேசுவதற்கு முன்னால்
ஒவ்வொரு வாக்கியத்தையும் மனத்திற்குள் நான் சொல்லிப் பார்த்துக்
கொள்ள வேண்டியிருந்தது. கத்தியையும் முள்ளையும் கொண்டு எடுத்துச்
சாப்பிடவும் எனக்குத் தெரியாது. பரிமாறப் போகும் உணவு வகையைக்
குறிப்பிடும் சீட்டில் கண்டவைகளில் மாமிசம் கலவாத பண்டம் எது
என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அப்பொழுது எனக்குத் தைரியமில்லை.
ஆகையால், சாப்பாட்டு அறைக்குச் சென்று உட்கார்ந்து நான் சாப்பிடவே
இல்லை. என் அறையிலேயே சாப்பிட்டு விடுவேன் நான் சாப்பிட்டதெல்லாம்
பெரும்பாலும் நான் உடன்கொண்டு வந்திருந்த மிட்டாயும் பழங்களுமே.
ஸ்ரீ மஜ்முதாருக்கு இத்தகைய சங்கடம் எதுவுமே தோன்றவில்லை. அவர்
எல்லோருடனும் சகஜமாகப் பழகிக் கொண்டிருந்தார். நாளெல்லாம் நான்
அறைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடப்பேன். மேல் தளத்தில் அதிகம்
பேர் இல்லாதபோதுதான் அங்கே போகத் துணிவேன். ஆனால் ஸ்ரீ மஜ்முதாரோ
மேல் தளத்திற்கு அடிக்கடி போய் உலாவுவார். பிரயாணிகளுடன் கூடிப்
பழகி, அவர்களுடன் தாராளமாகப் பேசும்படி அவர் எனக்கு அடிக்கடி
சொல்லுவார். வக்கீல்களுக்குப் பேச்சுச் சாமர்த்தியம் இருக்க
வேண்டும் என்பார், வக்கீல் தொழிலில் தமது அனுபவங்களையும் எடுத்துக்
கூறுவார். ஓர் அந்நிய மொழியில் பேசும்போது தவறு ஏற்படுவது சகஜம்
என்றும், ஆகையால் அதைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயத்திலேயே பேசும்படியாகவும் எனக்கு
அவர் புத்திமதி கூறினார். ஆனால், அவர் என்ன சொல்லியும் எனக்கு
இருந்த கூச்சத்தை மாத்திரம் போக்கடிக்கவே முடியவில்லை.
ஆங்கிலப் பிராணி ஒருவர், என்மீது
பிரியம் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுத்தார். அவர் என்னைவிட்
மூத்தவர். நான் என்ன சாப்பிட்டேன், நான் யார், நான் எங்கே போகிறேன்.
நான் இப்படிக் கூச்சப்படுவது ஏன் என்றெல்லாம் அவர் என்னை விசாரித்தார்.
சாப்பாட்டு அறைக்கு வந்து எல்லோருடனும் சாப்பிடும்படியும் சொன்னார்.
மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நான் பிடிவாதமாகக் கூறியதைக்
கேட்டுச் சிரித்தார். நாங்கள் செங்கடலை அடைந்ததும் அவர் நட்பும்
முறையில் பின்வருமாறு கூறினார். அதெல்லாம் இதுவரை மிகவும் சரி.
ஆனால் பிஸ்கே குடாக்கடல் போய்ச் சேர்ந்ததும் உம்முடைய தீர்மானத்தையெல்லாம்
மாற்றிக் கொண்டுவிட வேண்டியதுதான். இங்கிலாந்தில் குளிர் அதிகமாகையால்
மாமிசம் சாப்பிடாமல் அங்கே யாருமே உயிர் வாழ முடியாது.
அங்கும் மாமிசம் சாப்பிடாமல் மனிதர்
இருக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்றேன்.
அதெல்லாம் வெறும் கதை. இதை நிச்சயமாக
நம்பும். புலால் உண்ணாமல் அங்கே இருப்பர் எனக்குத் தெரிந்த வரையில்
யாருமே இல்லை. நான் குடிக்கிறேன். ஆனால் உம்மையும் குடிக்குமாறு
நான் சொல்லவில்லையல்லவா ? மாமிசம் சாப்பிடாமல் அங்கே உயிர் வாழ
முடியாதாகையால் நீர் புலால் உண்டே ஆக வேண்டும் என நினைக்கிறேன்
என்றார்.
உங்கள் அன்பான புத்திமதிக்கு என்
நன்றி, ஆனால், புலாலலைத் தீண்டுவதில்லை என்று என் அன்னைக்கு
நான் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால்
அதைத் தின்னுவது என்பதை நான் நினைப்பதற்கும் இல்லை. அதைத் தின்னாமல்
இருப்பது சாத்தியமில்லை என்று கண்டால் நான் இந்தியாவுக்கு திரும்பி
விடுவேனேயன்றி அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக மாமிசம் தின்னமாட்டேன்
என்றேன்.
பிஸ்கே குடாக்கடலை அடைந்தோம்.
மாமிசம் திண்பதும் குடிப்பதும் அவசியம் என்ற உணர்ச்சி அப்பொழுதும்
எனக்கு ஏற்படவில்லை. மாமிசமே சாப்பிடாமல் இருந்ததற்கு அத்தாட்சிப்
பத்திரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்கள்.
ஆதலால், அத்தகைய அத்தாட்சி ஒன்று எழுதித் தருமாறு அந்த ஆங்கில
நண்பரிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைக்
கொஞ்ச காலம் பத்திரமாக வைத்தும் இ,ருந்தேன். ஆனால் மாமிசம் சாப்பிடுகிறவர்களும்
அத்தகயை அத்தாட்சியைப் பெற்றுவிட முடியும் என்பதை நான் பின்னால்
கண்டது அத்தாட்சி பத்திர விஷயத்தில் எனக்கிருந்த மோகம் போய்
விட்டது. என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையென்றால் இவ்விஷயத்தில்
அத்தாட்சிப் பத்திரம் வைத்திருந்துதான் என்ன பயன் ?
முடிவாக, சௌத்தாம்டன் துறைமுகம்
போய்ச் சேர்ந்தோம். அன்று சனிக்கிழமை என்றே எனக்கு ஞாபகம். கப்பலில்
இருந்த போது கறுப்பு உடை தரித்திருந்தேன். என் நண்பர்கள் தயாரித்துக்
கொடுத்த வெள்ளைக் கம்பளி உடையைக் கப்பலிருந்து இறங்கும்போது
போட்டுக்கொள்ளுவது என்று வைத்திருந்தேன். இறங்கம்போது வெள்ளை
உடை அணிந்தால் அழகாயிருக்கும் என்று நினைத்தேன்.
ஆகவே, வெள்ளை கம்பளி ஆடை உடுத்திக்
கொண்டு இறங்கினேன். அப்பொழுது செப்டம்பர் மாதக் கடைசி, அத்தகைய
உடை உடுத்தியவன் நான் ஒருவனே என்பதைக் கண்டேன். மற்றவர்களெல்லாம்
கிரிண்ட்லே கம்பெனியின் ஏஜெண்டிடம் தங்கள் சாமான்களை எல்லாம்
ஒப்படைத்து விட்டு இறங்கினார்கள். நானும் அப்படியே செய்ய வேண்டும்
என்று என் சாமான்களை - சாவி உட்பட அந்த ஏஜெண்டிடம் ஒப்பித்தேன்.
என்னிடம் நான்கு அறிமுகக் கடிதங்கள்
இருந்தன. டாக்டர் பி.ஜே. மேத்தா, ஸ்ரீ தளபத்ராம் சுக்லா, ராஜகுமாரர்
ரஞ்சித் சிங் ஜி, தாதாபாய் ஆகிய நால்வருக்குமே அக்கடிதங்கள்.
லண்டனில் விக்டோரியா ஹோட்டலில் போய்த் தங்கும்படி கப்பலில் யாரோ
ஒருவர் சொன்னார். அதன்படி நானும் ஸ்ரீ மஜ்முதாரும் அங்கே போனோம்.
நான் ஒருவனே வெள்ளையுடையுடன் இருப்பது எனக்குப் பெரிய அவமானமாக
இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், என் சாமான்களைக்
கிரிண்ட்லே கம்பெனியார் அதற்கு மறுநாளே கொண்டுவந்து சேர்பார்கள்
என்று ஹோட்டலில் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
டாக்டர் மேத்தாவுக்கு சௌத்தாம்டனிலிருந்து
தந்தி கொடுத்திருந்தேன். அன்றிரவு எட்டு மணிக்கு அவர் என்னைப்
பார்க்க வந்தார். மிக்க அன்புடன் எனக்கு முகமன் கூறினார். நான்
வெள்ளை கம்பளி உடை தரித்திருப்பதைப் பார்த்துச் சிரித்தார்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உயரத் தொப்பியை எடுத்தேன்.
அது அவ்வளவு மிருதுவாக இருக்கிறது என்பதை அறிய அதைத் தடவி பார்த்தேன்.
தெரியாமல் எதிர்ப்புறமாகத் தடவி விட்டேன். அது ஒரு பிராணியின்
மிருதுவான ரோமத்தால் ஆனது. எனவே, நான் தடவியதனால் அந்த ரோமமெல்லாம்
கலைந்து விட்டது. நான் செய்ததையெல்லாம் ஒரு மாதிரி கோபத்துடன்
டாக்டர் மேத்தா பார்த்துவிட்டு என்னைத் தடுத்தார். ஆனால் , விஷயம்
நடந்தது நடந்துவிட்டது. இச்சம்பவம் வருங்காலத்திற்கு எனக்கு
ஓர் எச்சரிக்கையாயிற்று. ஐரோப்பிய மரியாதைச் சம்பிரதாயங்களில்
நான் கற்ற முதல் பாடம் இது அந்தச் சம்பிரதாய விவரங்களைப் பற்றி
டாக்டர் மேத்தா வேடிக்கையாகவே எனக்குப் பாடம் கற்பித்தார். பிறருடைய
சாமான்களைத் தொடரீர் என்றார். ஒருவர் முதன்முதலில் அறிமுகமானதும்
இந்தியாவில் கேட்பதுபோல் அவரிடம் கேள்விகளெல்லாம் போடாதேயும்,
இரைந்து பேசக்கூடாது பேசிக்கொண்டிருக்கையில் இந்தியாவில் நானம்
கூப்பிடுவதைப்போல் யாரையும், ஸார், என்று கூப்பிடக்கூடாது. வேலைக்காரர்களும்
சீழிருப்பவர்களும் மாத்திரமே அப்படிக் கூப்பிடுவார்கள் என்றார்.
இப்படியெல்லாம் பல விஷயங்களை எனக்கு போதித்தார். ஹோட்டலில் தங்கினால்
செலவு அதிகமாகும் என்றும், தனிப்பட்ட ஒரு குடும்பத்தினருடன்
தங்கியிருப்பதே நல்லது என்றும் சொன்னார். அதைப் பற்றித் திங்கட்கிழமை
யோசிப்பதென்று ஒத்திவைத்தோம்.
ஹோட்டல் வாசம் - எனக்கும் சரி,
ஸ்ரீ மஜ்முதாருக்கும் சரி, சங்கடமானதாக இருந்தது. அதோடு, செலவும்
அதிகமாயிற்று மால்டாவிலிருந்து எங்களுடன் கப்பலில் வந்த ஒரு
சிந்திக்காரர் ஸ்ரீ மஜ்முதாருக்கு நண்பரானார். லண்டன் அவருக்குப்
புதிதல்ல ஆகவே, நாங்கள் தங்குவதற்கு அறை பார்த்துத் தருவதாக
அவர் சொன்னார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். திங்கட்கிழமை எங்கள்
சாமான்கள் வந்த சேர்ந்ததும் ஹோட்டல் கணக்கைத் தீர்த்து விட்டு,
சிந்தி நண்பர் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்திய அறைகளில் இருக்கப்
போய்விட்டோம். ஹோட்டலுக்கு நான் 3 பவுன் கொடுக்கவேண்டி வந்தது
* அந்தத் தொகையைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் என்பது
எனக்கு நினைவிருக்கிறது. செலவு இவ்வளவு அதிகமாக இருந்ததே ஒழிய,
அங்கே நான் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன் என்றே சொல்ல
வேண்டும் * அங்கே கொடுத்த சாப்பாட்டில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.
ஓர் உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்று வேறொன்றைக் கொண்டுவரச்
சொன்னால், இரண்டுக்கும் சேர்த்துப் பணம் கொடுக்க வேண்டி வந்தது.
இதெல்லாம் இப்படி இருக்க உண்மை என்னவென்றால் பம்பாயிலிருந்து
கொண்டு வந்த ஆகாரதிகளைக் கொண்டே நான் காலம் கழிக்கலானேன்.
புது அறையிலும் எனக்கு மன நிம்மதியே
இல்லை. வீட்டு நினைவும், நாட்டு நினைவுமே எனக்கு இடைவிடாமல்
இருந்து கொண்டிருந்தன. என் அன்னையின் அன்பு அடிக்கடி என் நினைவுக்கு
வரும். இரவில் கண்ணீர் பெருகி, கன்னங்களில் அருவியாக வழியும்.
வீட்டைப் பற்றிய எல்லாவித நினைவுகளும் வந்துவிடவே தூங்கவே முடியவில்லை.
என் துயரத்தை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும்
வழியில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொள்ள முடிந்திருந்தாலும்
அதனாலும் ஒரு பயனும் இராது. ஏனெனில், அறிவேன் மக்கள் அவர்களுடைய
பழக்க வழக்கங்கள் அவர்களுடைய வீடுகள் எல்லாமே விசித்திரமாக இருந்தன.
ஆங்கில மரியாதை முறைகள் விஷயத்திலோ எனக்கு எதுவுமே தெரியாது.
ஆகையால், எங்கே தவறு செய்துவிடுவேனோ என்பதற்காக உணவு விரதமோ
அதிகப்படியானதோர் அசௌகரியம். நான் சாப்பிடக்கூடிய ஆகார வகைகளும்
ருசியற்றவைகளாகவும் சப்பென்றும் இருந்தன. எனவே, இருதலைக் கொள்ளி
எறும்பு போல் ஆனேன். இங்கிலாந்து வாசத்தை என்னால் சகிக்க முடியவில்லை
ஆனால், இந்தியாவுக்கு திரும்பிவிடுவது என்பதையோ நினைக்கக்கூட
முடியாது. வந்தது வந்துவிட்டேன், மூன்று ஆண்டுகள் இருந்து முடித்துவிட
வேண்டும் என்று கூறியது, என் அந்தராத்மா.