மோசடியான வேலையா?
நான் கூறிய யோசனை சிறந்தது என்பதில்
எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த வழக்கைச் சரியானபடி
நடத்திவிட என்னால் முடியுமா என்று அதிக தூரம் ஐயுற்றேன். சுப்ரீம்
கோர்டின் முன்பு இத்தகையதொரு கஷ்டமான வழக்கில் விவாதிக்க முற்படுவது
மிகுந்த துணிச்சலான காரியமே என்று எண்ணினேன். பயத்துடன் நடுங்கிக்
கொண்டே நீதிபதிகளின் முன்பு எழுந்து நின்றேன். கணக்கில் ஏற்பட்டுவிட்டதவறைப்பற்றி
நான் கூறியதும் நீதிபதிகளில் ஒருவர், இது மோசடியான வேலையல்லவா,
ஸ்ரீ காந்தி? என்று கேட்டார். அவர் இவ்வாறு கூறக் கேட்டதும்
என் உள்ளம் கொதித்து விட்டது. காரணம் எதுவுமே இல்லாதபோது, மோசடியான
வேலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுவது சகிக்க முடியாதது.
இவ்விதம் ஆரம்பத்திலேயே ஒரு நீதிபதி துவேஷம் கொண்டிருக்கும்போது
இந்தக் கஷ்டமான வழக்கில் வெற்றி பெறுவதற்குச் சந்தர்ப்பமே இல்லை
என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என்றாலும், மனத்தைச் சாந்தப்படுத்திக்
கொண்டு, நான் கூறுவதை முழுவதும் கேட்டுக் கொள்ளாமலேயே இதில்
மோசடியான வேலை இருப்பதாக நீதிபதியவர்கள் சந்தேகிப்பதைக் குறித்து
ஆச்சரியமடைகிறேன் என்றேன். அப்படி நான் குற்றம் சாட்டவில்லை.
அது மாதிரி இருக்குமா என்ற யோசனைதான் என்றார் நீதிபதி. அப்படி
யோசிப்பது இந்த இடத்தில் குற்றச்சாட்டுக்கே சமமானதாகும் என்று
எனக்குத் தோன்றுகிறது.
நான் சொல்லப் போவது முழுவதையும் கேட்டுவிட்டு
அதன் பிறகு காரணம் இருந்தால் என் மீது குற்றம் சாட்டும்படி கேட்டுக்
கொள்ளுகிறேன் என்றேன். அதற்கு நீதிபதி, இடையில் குறுக்கிட்டதற்காக
வருந்துகிறேன். கணக்கில் ஏற்பட்டிருக்கும் தவறைக் குறித்து உங்கள்
சமாதானத்தைத் தொடர்ந்து சொல்லுங்கள் என்றார்.நான் கூறவேண்டிய
சமாதானத்திற்குப் போதுமான ஆதாரங்கள் என்னிடம் இருந்தன. நீதிபதி
இந்தப் பிரச்சனையைக் கிளப்பியது நல்லதாயிற்று. ஆரம்பம் முதலே
என்னுடைய வாதங்களை நீதிபதிகள் கவனிக்கும்படி செய்வதும் எனக்குச்
சாத்தியமாயிற்று. நான் அதிக உற்சாகமடைந்ததோடு என்னுடைய சமாதானத்தை
விவரமாக எடுத்துக் கூற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்
கொண்டேன். நீதிபதிகளும் நான் கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார்கள்.
கணக்கில் ஏற்பட்ட தவறு, கவனக் குறைவினால் ஏற்பட்டதே அன்றி வேறல்ல
என்பதை நீதிபதிகள் ஒப்புக்கொள்ளும்படி செய்வதும் என்னால் முடிந்தது.
ஆகையால், அதிகச் சிரமப்பட்டுச் செய்யப்பட்ட மத்தியஸ்தர் தீர்ப்பு
முழுவதையுமேதள்ளிவிட வேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. தவறு
ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டபடியால்தாம் அதிகமாக வாதம் செய்யவேண்டிய
அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எதிர்த் தரப்பு வக்கீல் இருந்தார்
என்று தோன்றியது. ஆனால், நேர்ந்துவிட்ட கணக்குத் தவறு கைத்தவறே
என்றும், அதைச் சுலபத்தில் திருத்திக்கொண்டு விடலாம் என்றும்
நீதிபதிகள் கருதினர். இதனால் எதிர்த் தரப்பு வக்கீலை அடிக்கடி
இடைமறித்துக் கேள்விகள் கேட்டனர். மத்தியஸ்தர் தீர்ப்பே தவறானது
என்று கூறி அதைத் தாக்க அந்த வக்கீல் அதிகச் சிரமம் எடுத்துக்கொண்டார்.
ஆனால், ஆரம்பத்தில் என்னிடம் சந்தேகம் கொண்ட நீதிபதி, இப்பொழுது
நிச்சயமாக என் கட்சிக்குத் திரும்பி விட்டார்.
கணக்கிலிருந்த தவறை ஸ்ரீகாந்தி, ஒப்புக்கொண்டிருக்கவில்லை
என்று வைத்துக்கொள்ளுவோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
என்று நீதிபதி, அவரைக் கேட்டார். நாங்கள் நியமித்தவரைவிட அதிகத்
திறமை வாய்ந்த, யோக்கியமான கணக்கர் வேறு யாரும் எங்களுக்குக்
கிடைத்திருக்க மாட்டார் என்றார், அந்த வக்கீல். உங்கள் கட்சி
உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றே கோர்ட்டு
எண்ண வேண்டும். நிபுணராக உள்ள எந்தக் கணக்கரும் செய்துவிடக்கூடிய
தவறைத் தவிர வேறு எதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை என்றால்
வெளிப்படையான இந்தத் தவறுக்காகத் திரும்பவும் புதிதாக வழக்கை
நடத்தும் படியும், புதிதாகச் செலவு செய்யுமாறும் கட்சிக்காரர்களைக்
கட்டாயப்படுத்தக் கோர்ட்டு விரும்பவில்லை. இச்சிறு தவறை எளிதில்
திருத்திவிடலாம் என்று இருக்கும்போது இவ்வழக்கை மறு விசாரணைக்கு
அனுப்ப நாங்கள் உத்தரவிட வேண்டியிருக்காது என்று தொடர்ந்து சொன்னார்,
நீதிபதி. இவ்வாறு எதிர்த் தரப்பு வக்கீலின் ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டது.
கணக்குத் தவறைத் தானே திருத்திவிட்டு மத்தியஸ்தர் தீர்ப்பைக்
கோர்ட்டுஊர்ஜிதம் செய்ததா அல்லது திருத்தும்படி மத்தியஸ்தருக்கு
உத்தரவிட்டதா என்பது எனக்குச் சரியாக நினைவில் இல்லை. நான் மிகுந்த
மகிழ்ச்சியடைந்தேன். என் கட்சிக்காரரும், எங்கள் பெரிய வக்கீலும்கூட,
மகிழ்ச்சி அடைந்தனர். உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழிலை
நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற என் நம்பிக்கையும் உறுதியாயிற்று.
ஆனால், ஒரு விஷயத்தை வாசகர் நினைவில் வைக்க வேண்டும். வக்கீல்
தொழிலை நடத்துவதில் உண்மையோடு நடந்துகொண்டாலும், அத்தொழிலைச்
சீரழித்துவரும் அடிப்படையான குறைபாட்டைப் போக்கிவிட முடியாது.