போலக் துணிந்து இறங்கினார்
போனிக்ஸில் நான் குடியேற்றத்தை
ஆரம்பித்துவிட்ட போதிலும் அங்கே நான் நிரந்தரமாக வசிக்க முடியாமல்
இருந்தது, எப்பொழுதும் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நாளாவட்டத்தில்
வக்கீல் தொழிலிலிருந்து விலகி, இக்குடியேற்றத்தில் வசித்து,
என் உடலுழைப்பினால் என் ஜீவனத்திற்கு வேண்டியதைச் சம்பாதித்துக்கொண்டு,
போனிக்ஸ் பூரணத்துவத்தை அடைய நான் செய்யும் சேவையின் இன்பத்தை
அனுபவிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆரம்ப எண்ணம். ஆனால், அது
நிறைவேறவில்லை. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கிறது
என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் முடிவான
லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்துவிடுமானால்,
மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு
தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில் எதிர்பாத்ததைவிட
அதிக நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது. போனிக்ஸ் குடியேற்றம்
எதிர்பாராத விதமாக மாறுதல் அடைந்ததும், எதிர் பாராமல் நேர்ந்த
சில நிகழ்ச்சிகளும், நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட
மேலாக முடிந்தன என்று சொல்லுவது கஷ்டமேயானாலும், தீமையாக மாத்திரம்
முடியவில்லை.
நாங்கள் எல்லோரும், உடல் உழைப்பினாலேயே ஜீவனம்
செய்வது சாத்தியமாக வேண்டும் என்பதற்காக, அச்சுக்கூடத்தைச் சுற்றி
இருந்த நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொண்டோம்.
இதில் ஒரு பகுதி என் பங்குக்கு விழுந்தது. இந்த ஒவ்வொரு பகுதி
நிலத்திலும், எங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இரும்புத் தகடு
போட்டு வீடுகளைக் கட்டினோம். நாங்கள் விரும்பியதெல்லாம், வைக்கோல்
வேய்ந்த மண் குடிசைகளைக் கட்டிக்கொள்ளு வதுதான். இல்லாவிட்டால்,
சாதாரண விவசாயி வசிக்கக் கூடிய வகையில் சிறு செங்கல் வீடுகளைக்
கட்டிக் கொள்ளுவது என்பதே. ஆனால், அது நிறைவேறவில்லை. அப்படிக்
கட்டுவதாக இருந்தால் அதிகச் செலவாகும்; அதிக காலமும் பிடிக்கும்.
நாங்களோ, கூடுமானவரையில் சீக்கிரத்திலேயே குடியேற்றத்தில் நிலைபெற்றுவிட
வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் இருந்தோம்.
மன்சுக்லால் நாஸரே இன்னும் பத்திரிகை ஆசிரியராக
இருந்தார். புதிய திட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியன்
ஒப்பீனியனுக்கு டர்பனில் ஒரு கிளைக் காரியாலயம் இருந்தது. அங்கே
இருந்துகொண்டே அவர் இப் பத்திரிகைக்கு வேலைசெய்து வந்தார். அச்சுக்
கோர்ப்போருக்குச் சம்பளம் கொடுத்து வந்தோம். ஆனால், குடியேற்றத்தைச்
சேர்ந்த ஒவ்வொருவரும், அச்சுக் கோர்க்கக் கற்றுக்கொண்டு விடவேண்டும்
என்பது என் அபிப்பிராயம். அச்சுக்கூடத்தில் இந்த வேலை அலுப்புத்
தட்டும் வேலையானாலும் சுலபமான வேலையே. ஆகையால், இதற்கு முன்னால்
இந்த வேலையைக் கற்றுக் கொள்ளாதிருந்தவர்கள், இப்பொழுது கற்றுக்கொண்டோம்.
ஆனால், இந்த வேலையில் நான் கடைசி வரையில் திறமை இல்லாதவனாகவே
இருந்தேன். மகன்லால் காந்தி இதில் எங்களெல்லோரையும்விட முதன்மையாய்
இருந்தார். இவர், இதற்கு முன்னால் அச்சுக்கூடத்தில் வேலையே செய்ததில்லையென்றாலும்,
அச்சுக் கோர்ப்பதில் அதிக சமர்த்தராகி விட்டார். அதிக வேகமாக
அச்சுக் கோர்ப்பவராகிவிட்டதோடு மாத்திரமல்லாமல், அச்சுக் கூடத்தின்
எல்லா வேலைகளையுமே வெகுவிரைவில் கற்றுக் கொண்டுவிட்டார். இது
எனக்கு அதிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவருடைய
ஆற்றல் அவருக்கே தெரியாது என்பதுதான் எப்பொழுதும் என் அபிப்பிராயம்.
கட்டிடங்களைக் கட்டி முடித்து நாங்கள் அங்கே
நிலை பெற ஆரம்பித்தவுடனேயே, புதிதாக அமைந்திருந்த கூட்டை விட்டுவிட்டு
நான் ஜோகன்னஸ்பர்க்கிற்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே இருந்த
வேலைகளை நான் கவனிக்காமலேயே அதிக காலத்திற்கு விட்டுவைத்துவிட
என்னால் ஆகவில்லை. ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பியதும், நான்
செய்திருக்கும் முக்கியமான மாறுதல்களைக் குறித்து ஸ்ரீ போலக்கிடம்
கூறினேன். அவர் இரவல் கொடுத்த புத்தகம் இவ்வளவு பலனுள்ளதாக ஆயிற்று
என்பதை அறிந்ததும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
“இப் புதிய முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்ளச் சாத்தியப்படாதா?”
என்று கேட்டார். “நிச்சயமாகச் சாத்தியமே. நீங்கள் விரும்பினால்
நீங்களும் குடியேற்றத்தில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். “என்னைச்
சேர்த்துக் கொள்ளுவதாக இருந்தால் நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
அவருடைய உறுதி என்னைக் கவர்ந்துவிட்டது. கிரிடிக்
பத்திரிகையில் தாம் செய்து வந்த வேலையிலிருந்து ஒரு மாதத்தில்
விலகிக்கொள்ள அனுமதிக்குமாறு பிரதம ஆசிரியருக்கு எழுதினார்.
பின்னர் அதிலிருந்து விலகிப் போனிக்ஸு க்கு வந்து சேர்ந்தார்.
தமது இனிய சுபாவத்தினாலும், எல்லோருடனும் நன்றாகப் பழகும் குணத்தினாலும்,
வெகு சீக்கிரத்தில் அவர் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்துவிட்டார்.
எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் ஆகிவிட்டார். எளிமை அவருடைய
சுபாவத்திலேயே இருந்தது. போனிக்ஸ் வாழ்க்கை அவருக்கு விசித்திரமானதாகவோ,
கஷ்டமானதாகவோ தோன்றவில்லை. நீரிலிருப்பது மீனுக்கு எவ்விதம்
இயற்கையோ அதேபோல் இவ்வாழ்க்கை அவருக்கு ஒத்ததாக இருந்தது. ஆனால்,
அவரை அங்கேயே அதிக காலம் நான் வைத்திருப்பதற்கில்லை. இங்கிலாந்துக்குப்
போய்த் தமது சட்டப் படிப்பை முடிக்க ஸ்ரீ ரிச் விரும்பினார்.
எனவே, என் அலுவலகத்தின் வேலை பளுவை நான் ஒருவனே சமாளித்து விடுவதென்பது
அசாத்தியம். ஆகவே, என் அலுவலகத்தில் சேர்ந்து அட்டர்னியாகப்
பயிற்சி பெறுமாறு போலக்குக்கு யோசனை கூறினேன். முடிவில் நாங்கள்
இருவருமே அத் தொழிலிலிருந்து விலகிப் போனிக்ஸில் நிலைத்துவிடலாம்
என்று எண்ணியிருந்தேன். ஆனால், அது நிறைவேறாமலேயே போய்விட்டது.
நம்பும் சுபாவமுள்ளவர், போலக் ஒரு நண்பரிடம்
நம்பிக்கை வைத்து விடுவாரானால், அவரோடு விவாதித்துக் கொண்டிருப்பதைவிட
ஒத்துப் போகவே அவர் முயல்வார். போனிக்ஸிலிருந்து எனக்கு எழுதினார்.
அங்கே இருக்கும் வாழ்க்கை தமக்கு இன்பமாக இருக்கிறதென்றாலும்,
தாம் சந்தோஷமாகவே இருப்பினும், குடியேற்றத்தை அபிவிருத்தி செய்யலாம்
என்று நம்பினாலும், இதை விட்டுவிட்டுக் காரியாலயத்தில் சேர்ந்து
அட்டர்னிக்குப் பயிற்சி பெறுவதனால் நாங்கள் எங்கள் லட்சியத்தை
வெகு சீக்கிரத்தில் அடைந்து விடமுடியும் என்று நான் நினைத்ததால்
அப்படியே செய்யத் தாம் தயார் என்று எழுதினார். இக்கடிதத்தை நான்
மனப்பூர்வமாக வரவேற்கிறேன். போலக், போனிக்ஸிலிருந்து கிளம்பி
ஜோகன்னஸ்பர்க்கிற்கு வந்து பயிற்சி பெறத் தஸ்தாவேஜில் கையெழுத்தும்
இட்டார். அதே சமயத்தில் ஸ்காட்லாந்துக்காரரான ஒரு பிரம்மஞான
சங்கத்தினரையும் போலக்கைப் பின்பற்றும்படி அழைத்தேன். உள்ளூர்ச்
சட்டப் பரீட்சைக்குப் போவதற்காக அவர் என்னிடம் முன்பு பயிற்சி
பெற்று வந்தார். இப்பொழுது என் அழைப்பை ஏற்றுக்கொண்டு வக்கீல்
குமாஸ்தாவாகச் சேர்ந்தார். ஸ்ரீ மெக்கின்டயர் என்பது அவர் பெயர்.
இவ்வாறு, போனிக்ஸில் லட்சியங்களைச் சீக்கிரத்தில் அடைந்து விடவேண்டும்
என்ற உயரிய நோக்கத்தின் பேரில், நான் வேறு ஒரு திக்கில் மேலும்
மேலும் தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது.
கடவுள் மாத்திரம் வேறுவிதமாக எனக்கு அருள் செய்யாதிருந்தால்,
எளிய வாழ்க்கையின் பெயரால் விரித்திருந்த வலையில் நான் சிக்கிக்கொண்டிருந்திருப்பேன்.
யாருமே எண்ணியோ, எதிர்பார்த்தோ இராத வகையில், நானும் என்னுடைய
லட்சியங்களும் எவ்வாறு காப்பாற்றப் பட்டன என்பதை இன்னும் சில
அத்தியாயங்களுக்குப் பிறகு நான் விவரிப்பேன்.