ஆசியாவிலிருந்து வந்த எதேச்சாதிகாரிகள்
நான் டிரான்ஸ்வாலுக்குள் பிரவேசித்துவிட்டது
எப்படி என்பது புதிய இலாகாவின் தலைமை அதிகாரிகளுக்கு விளங்கவில்லை.
தங்களிடம் வரும் இந்தியரிடம் இதைப்பற்றி விசாரித்தார்கள். ஆனால்,
அவர்களாலும் நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை. எனக்குள்ள
பழைய தொடர்பை வைத்துக் கொண்டு அனுமதிச் சீட்டு இல்லாமலேயே நான்
நுழைந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டுவிடவே அதிகாரிகள்
முற்பட்டனர். அப்படித்தான் என்றால், நான் கைது செய்யப்பட வேண்டிய
குற்றத்தைச் செய்தவனாவேன்.
ஒரு பெரிய யுத்தம் முடிந்ததுமே, அப்போது அதிகாரத்திலிருக்கும்
அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்களைக் கொடுப்பது பொதுவான வழக்கம்.
தென்னாப்பிரிக்கா விஷயத்திலும் அதுவே நடந்தது. சமாதாப் பாதுகாப்பு
அவசரச் சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றியது. அதன்படி, அனுமதி
இல்லாமல் டிரான்ஸ்வாலுக்குள் வரும் யாரையும் கைது செய்து சிறைத்
தண்டனை விதிக்கலாம். அச்சட்டத்தின் இந்த விதியின் கீழ் என்னைக்
கைது செய்யலாமா என்று அதிகாரிகள் யோசித்தார்கள். ஆனால் அனுமதிச்
சீட்டைக் காட்டும்படி என்னைக் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
எனினும், அதிகாரிகள் டர்பனுக்குத் தந்தி கொடுத்து விசாரித்தார்கள்.
அனுமதிச் சீட்டின் பேரிலேயே நான் வந்திருக்கிறேன் என்று அறிந்ததும்
ஏமாற்றமடைந்தனர். ஆனால் இத்தகைய ஏமாற்றங்களினால் தோல்வியடைந்து
விடக் கூடியவர்கள் அல்ல அவர்கள். டிரான்ஸ்வாலுக்குள் வந்துவிடுவதில்
நான் வெற்றி பெற்றுவிட்டாலும் ஸ்ரீ சேம்பர் லேனிடம் நான் தூதுபோக
முடியாதபடி அவர்கள் என்னை வெற்றிகரமாகத் தடுத்துவிட முடியும்.
ஆகவே, தூதுசெல்லப்போகும் பிரதிநிதிகளின் பெயரைச்
சமர்ப்பிக்குமாறு சமூகத்தினரைக் கேட்டார்கள். தென்னாப்பிரிக்காவில்
எங்குமே நிறவெறி இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன். ஆனால்
இந்தியாவில் நான் கண்ட இழிவான தந்திரங்களும், கீழ்த்தரமான உபாயங்களும்
இங்கும் அதிகாரிகளிடம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே
இல்லை. தென்னாப்பிரிக்காவில் பொது இலாக்காக்கள் மக்களின் நன்மைக்கு
என்றே இருந்தன. அவை பொதுஜன அபிப்பிராயத்திற்கும் பதில் சொல்லக்
கடமைப்பட்டவை. ஆகையால் அதிகாரிகள் மரியாதையுடனும், அடக்கத்தோடும்
நடந்து கொள்ளுவார்கள். இதனால், வெள்ளையர் அல்லாதாருக்கும் ஓரளவுக்கு
நன்மை இருந்துவந்தது. ஆசியாவிலிருந்து அதிகாரிகள் வந்து சேர்ந்ததும்,
அவர்களுடன் எதேச்சாதிகாரமும், அங்கே எதேச்சாதிகாரர்கள் பெற்றிருந்த
பழக்கங்களும் கூடவே வந்துவிட்டன. தென்னாப்பிரிக்காவில் ஒரு வகையான
பொறுப்பாட்சி அல்லது ஜன நாயகம் இருந்தது. ஆனால், ஆசியாவிலிருந்து
இறக்குமதியான இந்தச் சரக்குகளோ, கலப்பற்ற எதேச்சாதிகார மயமானவை.
ஏனெனில், ஆசியாக்காரர்களை அந்நிய அரசாங்கமே ஆண்டு வருவதால் அவர்களுக்குப்
பொறுப்பாட்சி எதுவும் இல்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஐரோப்பியர்,
அந்த நாட்டில் குடியேறி நிரந்தரக் குடிகள் ஆகிவிட்டவர்கள். அவர்கள்
தென்னாபிரிக்கப் பிரடிஜகள் ஆனதால், இலாகா அதிகாரிகளின் மீது
அவர்களுக்கு ஆதிக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுதோ ஆசியாவிலிருந்து
ஏதேச்சாதிகாரிகள் வந்து விட்டார்கள். இதன் பயனாக இந்தியர் இருதலைக்
கொள்ளி எறும்புபோல் ஆயினர்.
இந்த எதச்சாதிகாரத்தின் கொடுமையை நான் நன்றாக
அனுபவித்திருக்கிறேன். இலாகாவின் பிரதம அதிகாரியை வந்து பார்க்குமாறு
முதலில் எனக்குக் கட்டளை வந்தது. அந்த அதிகாரி இலங்கையிலிருந்து
வந்தவர். பிரதம அதிகாரியின் கட்டளை வந்தது என்று நான் சொல்லுவது
விஷயத்தை நான் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றி விடக்கூடும்.
எனவே இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எழுத்து மூலமான உத்தரவு
எதுவும் எனக்கு வரவில்லை. ஆசியாக்காரர்களின் அதிகாரிகளை இந்தியத்
தலைவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிச் சந்தித்தவர்களில்
ஒருவர் காலஞ்சென்ற சேத் தயாப் ஹாஜிகான் முகமது. அந்தக் காரியாலயத்தின்
பிரதம அதிகாரி, நான் யார் ? நான் எதற்காக அங்கே வந்திருக்கிறேன்
என்று அவரைக் கேட்டார். அவர் எங்கள் ஆலோசகர். நாங்கள் கேட்டுக்
கொண்டதன் பேரில் அவர் வந்திருக்கிறார் என்றார், தயாப் சேத்.
அப்படியானால், நாங்கள் இங்கே எதற்காக இருக்கிறோம்
? உங்களைப் பாதுகாப்பதற்கென்றே நாங்கள் நியமிக்கப் பட்டிருக்கவில்லையா
? இங்கிருக்கும் நிலைமையைப் பற்றிக் காந்திக்கு என்ன தெரியும்
என்று கேட்டார் எதேச்சாதிகாரி. இக்குற்றச் சாட்டுக்குத் தயாப்
சேத் தம்மால் இயன்ற வரையில் பதில் சொன்னார். அது, பின்வருமாறு,
நீங்கள் இருக்கிறீர்கள் உண்மைதான். ஆனால் காந்தி எங்கள் மனிதர்.
அவருக்கு எங்கள் மொழி தெரியும். எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
எப்படியும் நீங்கள் அதிகாரிகள் தானே? என்னைத் தம் முன்னால் கொண்டு
வருமாறு துரை, தயாப் சேத்துக்கு உத்தரவு போட்டார். தயாப் சேத்
முதலியவர்களுடன் நான் துரையிடம் போனேன். எங்களை உட்காரச் சொல்லவில்லை.
நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டே இருந்தோம். இங்கே நீர் வந்தது
எதற்காக ? என்று துரை என்னைப் பார்த்துக் கேட்டார். எனது சகோதர
இந்தியர், தங்களுக்கு ஆலோசனை கூறி உதவ வேண்டும் என்று கேட்டுகொண்டதன்
பேரில் நான் வந்தேன் என்று பதில் கூறினேன்.
இங்கே வர உமக்கு உரிமை கிடையாது என்பது உமக்குத்
தெரியாதா ? நீர் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டு, தவறாக உமக்குக்
கொடுக்கப்பட்டுவிட்டது. இங்கு குடியேறிய இந்தியராக உம்மைக் கருத
முடியாது. நீர் திரும்பிப் போய்விட வேண்டும். ஸ்ரீ சேம்பர்லேனிடம்
நீர் தூது போகக்கூடாது. முக்கியமாக, இங்கிருக்கும் இந்தியரின்
பாதுகாப்புக்கென்றே ஆசியாக்காரர்களின் இலாகா ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
சரி நீர் போகலாம் என்று கூறித் துரை எங்களை அனுப்பி விட்டார்.
பதில் சொல்லுவதற்குச் சந்தர்ப்பமே அளிக்கவில்லை. ஆனால் என்னுடன்
வந்தவர்களை மாத்திரம் அங்கே காக்க வைத்தார். அவர்களைக் கண்டபடி
திட்டி, என்னை அனுப்பி விடுமாறு அவர்களுக்கு யோசனை கூறி அனுப்பினார்.
அதிக எரிச்சலுடன் அவர்கள் திரும்பிவந்தார்கள். இவ்விதம் நாங்கள்
எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று எங்களைக் குறுக்கிட்டது