அந்த அற்புதக் காட்சி!
இவ்வாறு ஒரு பக்கம் ரௌலட் கமிட்டி
அறிக்கையை எதிர்த்து நடந்த கிளர்ச்சி வளர்ந்து, தீவிரமாகிக்கொண்டு
வந்த சமயத்தில், மற்றொரு பக்கத்தில் அரசாங்கம், அக் கமிட்டியின்
அறிக்கையை அமுலுக்குக் கொண்டு வருவதில் மேலும் மேலும் அதிக உறுதிகொண்டது.
ரௌலட் மசோதாவையும் பிரசுரித்தார்கள். இந்திய சட்டசபைக் கூட்டத்திற்கு
என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை நான் போயிருக்கிறேன். அது, இந்த
மசோதாவின் பேரில் அந்தச் சபையில் விவாதம் நடந்தபோதுதான். அப்பொழுது
சாஸ்திரியார் ஆவேசமாகப் பேசினார். அரசாங்கத்திற்குப் பலமான எச்சரிக்கையும்
செய்தார். வைசிராய் பிரமித்துப்போய் அப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்ததாகத்
தோன்றியது. சாஸ்திரியார் தமது சூடான பேச்சு வன்மையைப் பொழிந்து
கொண்டிருந்த போது வைசிராய், கண்கொட்டாமல் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார். அவருடைய பேச்சில் உண்மையும், உணர்ச்சியும் நிறைந்திருந்தன.
ஒருவர் உண்மையிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் அவரை எழுப்பிவிட
முடியும். ஆனால், தூங்குவதாகப் பாசாங்குதான் செய்கிறார் என்றால்,
அப்படிப்பட்டவரை என்னதான் முயன்றாலும் எழுப்பிவிட முடியாது.
அரசாங்கத்தின் உண்மையான நிலைமையும் அதுதான்.
அது, முன்னாலேயே இதில் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டது
இதற்குச் சட்டரீதியான சடங்குகளை நிறைவேற்றி விடவேண்டும் என்பதில்
மாத்திரமே அது கவலை கொண்டு விட்டது. ஆகையால் சாஸ்திரியாரின்
உண்மையான எச்சரிக்கை அரசாங்கத்தினிடம் ஒரு மாறுதலையும் உண்டு
பண்ணவில்லை. இத்தகையதோர் நிலைமையில் என் பேச்சு வனாந்தரத்தில்
இட்ட ஓலமாகவே முடியும். வைசிராயை நான் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் அவருக்குக் கடிதங்கள் எழுதினேன்.
அரசாங்கத்தின் செய்கையால், சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுவதைத்
தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது என்று அக் கடிதங்களில்
கூறினேன். ஆனால், ஒன்றும் பயன்படவே இல்லை. மசோதாக்கள் இன்னும்
சட்டங்களாகக் கெஜட்டில் பிரசுரமாகவில்லை. நானோ, அதிக பலவீனமான
நிலையில் இருந்தேன். என்றாலும், சென்னையிலிருந்து எனக்கு அழைப்பு
வந்ததும், அந்த நீண்ட பிரயாணத்தினால் ஏற்படக்கூடிய அபாயத்திற்கும்
துணிவது என்று முடிவு செய்தேன். அச்சமயம் பொதுக் கூட்டங்களில்
போதிய அளவு உரக்கப் பேச என்னால் முடியாது.
பொதுக்கூட்டங்களில் நின்று கொண்டு பேசுவதற்கும்
இயலாது. அந்த நிலைமை எனக்கு இப்பொழுதும் இருந்து வருகிறது. நின்று
கொண்டு நீண்ட நேரம் பேச முயல்வேனாயின் என் உடம்பு முழுவதும்
நடுக்கமெடுக்கும்; மூச்சுத் திணறும். தென்னாடு எப்பொழுதுமே எனக்குச்
சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின்
காரணமாகத் தமிழர்மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனியுரிமை
இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள், என்
நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க
ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு
முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப்
பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்துகொண்டேன். அவருடன்
எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம்.
அது எப்படியாயினும், முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து
கொண்டது அப்பொழுதுதான். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார்
போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில்
மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும்,
அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால் தான் ராஜகோபாலாச்சாரியார்
சென்னையில் வக்கீல் தொழிலை நடத்தச் சேலத்திலிருந்து வந்திருந்தார்.
சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால்,
அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான்
கண்டுபிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க
ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே
நாங்கள் தங்கி இருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய்
எனக்கு விஷயத்தை கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன்
நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது
சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார்.
ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். இவருடன் நீங்கள்
நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு நாள்
சொன்னார். அவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத்
தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக் கூட்டங்களை நடத்துவதைத்
தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை.
ரௌலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச்
சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே
இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான்
அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்றச்
சட்டங்களை நாம் சாத்விக முறையில் மீற முடியுமா? அப்படிச் செய்வதாயின்
அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது? இதையும் இதுபோன்ற
பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு
வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு
கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் முக்கியமான பங்கெடுத்துக்
கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக
சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு
நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.
அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை
அவரிடம் தெரிவித்தும் விட்டேன். இந்த ஆலோசனைகளெல்லாம் நடந்து
கொண்டிருக்கையில், ரௌலட்மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற
செய்தி கிடைத்தது. அதைப்பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன்.
மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே
எழுந்துவிட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயுள்ள
நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது.
அது கனவைப்போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும்
ராஜ கோபாலச்சாரியாரிடம் கூறினேன்: நேற்றிரவு கனவில் ஒரு யோசனை
வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக்கொள்ளுவது
என்பதே அது.
ஆன்மத் தூய்மை செய்துகொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம்.
நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத்
தூய்மை செய்து கொள்ளுவதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது.
எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம்
நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள்
ஒரு நாளுக்கு மேல் படினி விரதம் இருக்கமாட்டார்கள். ஆகவே, பட்டினி
விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்கவேண்டும். இந்த நமது
கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று
சொல்லுவதற்கில்லை. ஆனால், பம்பாய், சென்னை, பீகார், சிந்து ஆகிய
மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம்
ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக்
காரணம் உண்டு என்றேகருதுகிறேன். என்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலச்சாரியார்
உடனே ஏற்றுக்கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது
அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான்
தயாரித்தேன். 1919 மார்ச் 30-ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது
என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6-ஆம்
தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே
அறிவித்தோம். நீண்டகாலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை.
இதெல்லாம் எவ்விதம் நடந்ததென்பதை யார் அறிவார்கள்? இந்தியா முழுவதிலும்
ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும்
அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தன. அது மிகவும் அற்புதமான
காட்சியாக இருந்தது.